நமது தமிழ்த்தூது மின்னிதழ் இப்பொழுது இன்னும் செம்மைபடுத்தப்பட்டு அதிக பக்கங்களுடன் வந்து கொண்டிருக்கிறது. நிறைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை நம் இதழுக்கு அனுப்புவது மிகவும் சந்தோஷமான விஷயம். அதைப் போல நிறைய பாராட்டுக்களும் குவிகின்றன. வாசகர்கள் தங்கள் கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் தயங்காமல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நமது தமிழ்த் தூது முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிடப்பட்டு வருகிறது. வாசகர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று முடிந்த அளவில் நம் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்து, நம் இணைய இதழை தமிழ் கூறும் நல்லுலகம் படித்துப் பயனடையச் செய்ய வேண்டும். உங்களின் படைப்புக்களை hitamilthoodhu@gmail.com என்ற முகவரிக்கு பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் சிறு போட்டோவுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அவற்றை இந்த இணைப்பில் நேரடியாகவும் பதிவேற்றலாம்.
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக் கொள்ளாமல், அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
குறள் கதை
உண்மை அறிதல்
ஒரு ஆற்றின் ஓரத்தில் ஒரு ஆமையும், முதலையும் வாழ்ந்து வந்தன. ஆமை ஆற்று மணலில் முட்டையிட்டுப் பத்திரமாய் மணலால் மூடிவிட்டுச் செல்லும். ஆமை கஷ்டப்பட்டு ஒளித்து வைக்கும் முட்டையை எல்லாம் ஆமை இரை தேடிச் செல்லும் நேரத்தில் முதலை வந்து குடித்து விட்டுச் சென்றது.
இதனால் ஆமை, முட்டையிட்டும் தன்னால் குட்டிகளைப் பொரிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலைக்கு ஆளானது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு இடத்தில் முட்டையிட்டும் யார் முட்டைகளைத் திருடித் தின்பது என்று கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட முதலை ஆமையிடம் “என்னாச்சு நண்பா? ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்றது.
அதற்கு ஆமை “நான் இடும் முட்டைகளை எல்லாம் ஏதோ ஒன்று வந்து சாப்பிட்டு விட்டுச் செல்கிறது. நீதான் எப்பொழுதும் ஆற்றில் இருக்கிறாயே.. .. உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டது.
இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த முதலை. “ஒ! உனக்கு விஷயமே தெரியாதா? பக்கத்தில் உள்ள புதரில் பாம்பு ஒன்று உள்ளது. அதுதான் தினமும் நீ வெளியில் சென்றதும் வந்து உன் முட்டைகளைச் சாப்பிட்டு விட்டுச் செல்கிறது.” என்றது.
இதைக் கேட்ட ஆமை “இந்தப் பாம்பை எப்படியாவது விரட்டி விட வேண்டும்” என்று கோபத்துடன் நினைத்துக் கொண்டது. அப்பொழுதுதான் அதற்குக் கீரி நண்பனின் நினைவு வந்தது. உடனே கீரியிடம் சென்று உதவி கேட்டது.
கீரியும் “பாம்பு வந்து உன் முட்டைகளை எடுப்பதை நீ பார்த்தாயா?” என்று கேட்டது.
அதற்கு ஆமை “இல்லை.. .. நான் பார்க்கவில்லை. ஆற்றில் உள்ள முதலைதான் பார்த்ததாகச் சொன்னது. “ என்றது.
அதைக் கேட்டு யோசித்த கீரி “முதலை சொன்னதும் உடனே நீ நம்பி விட்டாயா? அது சொன்னதுதான் உண்மை என்று எப்படி நம்ப முடியும்? முதலையே இப்படிச் செய்திருக்கக் கூடாதா என்ன?” என்றது.
இதைக் கேட்ட ஆமையும் “ஒருவேளை கீரி சொல்வது போல முதலை இதனைச் செய்யவும் வாய்ப்பு உள்ளதே .. .. இதை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றுக் குழம்பியது.
அடுத்த நாள் வழக்கம் போல முட்டையை இட்டு மணலை மூடி மறைத்தபின், இரை தேடச் செல்வது போலச் சென்று அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டது.
ஆமை செல்வதைப் பார்த்த முதலை வழக்கம் போல ஆமை மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து குடிப்பதைக் கண்டு மனம் நொந்து போனது.
“இத்தனை நாள் முதலையின் பேச்சை நம்பிக் கொண்டு பாம்பின் மேல் சந்தேகம் கொண்டிருந்தால்.. .. முதலை அல்லவா முட்டைகளை எல்லாம் திருடியிருக்கிறது? இனியாவது யார் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பாமல் அது எந்த அளவு உண்மை என்று ஆராய வேண்டும்.. ..” என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் சென்று முட்டையிட்டு குட்டிகளைப் பொரித்துச் சந்தோஷமாக வாழ்ந்தது.
கதையின் நீதி: எந்த ஒரு விஷயத்தை யார் ஒருவர் சொன்னாலும் அவற்றை அப்படியே நம்பாமல் அவற்றிலே உள்ள உண்மையைக் கண்டறிவதே அறிவாகும்.
இலக்கியச் சோலை
இந்தப் பகுதியில் பாரதியார், ஔவையார், அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய தேசியக் கவிஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஒவ்வொரு இதழிலும் அவர்களின் புகழ் பெற்ற பாடல்களின் மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.
நமது பண்பாடு
கோலம் வரைவது எப்படி?
ஒரு நல்ல கோலம் போடுவது உங்கள் வீட்டிற்கு மங்களத்தையும் அழகையும் தரும். புள்ளிக் கோலம் போடுவதற்கான எளிய செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்
கோலமாவு (அரிசி மாவு அல்லது வெள்ளைக்கல் பொடி)
காவிப்பொடி (விருப்பப்பட்டால் பார்டர் கட்ட)
கோலம் போடும் செய்முறை:
வாசலை நன்றாகப் பெருக்கி, தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்ய வேண்டும். சிமெண்ட் அல்லது தரை காய்ந்தவுடன் கோலம் போடத் தொடங்கவும். முதலில் நேராகவும் சம இடைவெளியிலும் புள்ளிகளை வைக்க வேண்டும். ஆரம்பக் கோலங்களுக்கு 5 புள்ளிகள் 5 வரிசை (நேர் புள்ளி) அல்லது 5 முதல் 1 வரை (இடைப் புள்ளி) வைக்கலாம். புள்ளிகளைச் சுற்றி வளைவாகவோ அல்லது நேர்க்கோடாகவோ இணைக்க வேண்டும். கோலமாவின் ஓட்டம் தடைபடாமல் மெலிதாக விழ வேண்டும். கோலத்தின் நடுவிலும் ஓரங்களிலும் சிறிய பூக்கள் அல்லது இலைகள் வரையலாம். கோலத்தைச் சுற்றி காவிப்பொடி கொண்டு பார்டர் கட்டினால் கோலம் எடுப்பாகத் தெரியும்.
சிறந்த கோலம் போட 4 முக்கிய குறிப்புகள்:
அரிசி மாவு: மார்கழி அல்லது விசேஷ நாட்களில் பச்சரிசி மாவில் கோலம் போடுவது சிறப்பு.
பயிற்சி: தினமும் சிறிய கோலங்கள் போட்டுப் பழகினால் கைகள் நேர்த்தியாகும்.
கட்டைவிரல் கட்டுப்பாடு: கோலமாவை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரல் நடுவில் பிடித்து நிதானமாக விட வேண்டும்.
சுத்தம்: கோலம் போடும் இடத்தில் தேவையில்லாத கோடுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அழகு தரும்.
முதலில் தரையைச் சுத்தம் செய்து, நேர் புள்ளியாக 5 வரிசைகள் வைக்கவும்.
கோலம் போடும் எளிய செய்முறை
கோலத்தின் நடுவில் இருக்கும் புள்ளியை (3வது வரிசையில் உள்ள 3வது புள்ளி) சுற்றி ஒரு சிறிய சதுரம் அல்லது வட்டம் வரையவும். நடுப்புள்ளியிலிருந்து நான்கு திசைகளிலும் (மேல், கீழ், இடது, வலது) உள்ள புள்ளிகளை நோக்கி நேர்க்கோடுகள் இழுக்கவும். வெளிப்பகுதியில் இருக்கும் மூலை புள்ளிகளை இணைத்து, அகல் விளக்கு (Diya) போன்ற வடிவத்தைக் கொண்டு வர வேண்டும். நான்கு மூலைகளிலும் உள்ள விளக்குகளின் உச்சியில் ஒரு சிறிய சுடர் (Flame) போன்ற வளைவை வரையவும். விளக்குகளின் பக்கவாட்டில் உள்ள மீதமுள்ள புள்ளிகளை எளிய வளைவுக்கோடுகள் (Curves) மூலம் இணைத்து கோலத்தை நிறைவு செய்யவும்.
உணவே மருந்து
ஓமம் குழம்பு
சுவையான ஓமம் குழம்பு செய்ய ஓமம், மிளகு, சீரகம், புளி மற்றும் நல்லெண்ணெய் தேவை. முதலில் மசாலா பொருட்களை வறுத்து அரைக்கவும். பின் புளிக்கரைசல் சேர்த்து தாளித்து கொதிக்கவிட்டு, அரைத்த விழுதை சேர்த்து கெட்டியாகும் வரை இறக்க வேண்டும். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
ஓமம் - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை, கடுகு - தேவையான அளவு
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் ஓமம், மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை சென்றதும் அரைத்த ஓமம் விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
இந்தக் குழம்பை, குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு பத்தியமாக தரலாம். வயிற்று பொருமல், வாயு பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பாட்டி வைத்தியம்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான உடல்நலக் குறைபாடுகளுக்கு பாரம்பரியமான எளிய பாட்டி வைத்திய முறைகள் காலம்காலமாகப் பயன்பாட்டில் உள்ளன. இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இந்த வீட்டு வைத்தியங்கள் உடனடித் தீர்வைத் தர உதவுகின்றன.
சளி மற்றும் இருமலுக்கு:
கற்பூரவள்ளி இலைச்சாறு: கற்பூரவள்ளி இலையைச் சூடாக்கி, அதன் சாெட்டப் பிழிந்து ஒரு சங்கு அளவு கொடுக்கச் சளி குறையும்.
துளசி மற்றும் தேன்: துளசி இலைச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் இருமல் மற்றும் நெஞ்சு சளி கரையும்.
பூண்டு தைலம்: நல்லெண்ணெயில் பூண்டு மற்றும் ஓமம் சேர்த்துச் சூடாக்கி, குழந்தையின் மார்பு மற்றும் கால்களில் தடவலாம்.
வயிற்று வலி மற்றும் செரிமானத்திற்கு:
ஓம நீர்: ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரைச் சிறிதளவு கொடுத்தால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறு நீங்கும்.
பெருங்காயம்: பெருங்காயத்தைக் கரைத்து குழந்தையின் உச்சி மற்றும் வயிற்றில் தடவினால் வாயுத் தொல்லை சரியாகும்.
குறிப்பு: இவை பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மட்டுமே; மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகக் கருதக்கூடாது. கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மூலிகை சார்ந்த வைத்தியங்களை அளிப்பதற்கு முன் மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
படிக்கலாம், வாங்க!
நூலின் பெயர்: அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
சிறப்பு விருது: இப்புத்தகத்திற்காக ஆசிரியருக்கு 2021-ஆம் ஆண்டின் பால புரஸ்கார் சாகித்ய விருது (Bala Sahitya Puraskar) வழங்கப்பட்டது.
பொதுவாக அம்மாக்கள் தான் குழந்தைகளுக்குக் கதை சொல்வார்கள். ஆனால் இந்த நூலின் தலைப்புக்கதை முற்றிலும் மாறுபட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் கவின்குட்டி என்ற சிறுமி, தன் அம்மாவுக்கு ஒரு புதுமையான கதையைக் கூறுகிறாள். இந்தத் தொகுப்பில் மொத்தம் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 'அழகிரிசாமியும் ஜீம்பூம்பா மரமும்' தொடங்கி 'சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு' வரை பல சுவாரசியமான கதைகள் இதில் அடக்கம்.
நாம் சிறுவயதில் கேட்ட 'காகமும் நரியும்' கதையை இதில் 'பழைய பாட்டியும் புதிய வடையும்' என்ற தலைப்பில் ஆசிரியர் புதுமையாக மாற்றியுள்ளார். இதில் காகமும் நரியும் ஏமாற்ற நினைக்காமல், உழைத்துச் சாப்பிடும் நல்ல குணவதியாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் சுயமாகப் படித்துப் பழகும் வகையில் மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி கதைகள் நகர்கின்றன.ஒவ்வொரு கதையும் குழந்தைகளின் கற்பனைத் திறனை மேம்படுத்துவதோடு, எளிய மனிதர்கள் மற்றும் எளிய உயிரினங்கள் மீதான அன்பையும், சமத்துவத்தையும் போதிக்கிறது.
கதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன.
8 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மிகவும் ஏற்றது. அலைபேசி (Mobile) மற்றும் கணினித் திரைகளில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த'அம்மாவுக்கு மகள்சொன்ன உலகின் முதல் கதை'ஒரு மிகச்சிறந்த நுழைவாயில். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பரிசளிக்க வேண்டிய மிக அருமையான புத்தகமிது!
உலகளாவிய தமிழ்ச் செய்திகள் | Global Tamil News
From vennai to oorga, how food items acquired cultural meanings in Tamil August 25, 2026
Borrowing expressions from food is common across languages. In Western cultures, particularly English, expressions such as ‘cool as a cucumber’or ‘couch potato’ tend to draw parallels between food and human behaviour, appearance, or character. In Indian languages too, including in Tamil, such parallels exist.
‘Vengayam’ (onion) denotes a person with no substance, as the vegetable can be peeled and has no essence inside, Dr Sudha says, adding that the same applies to ‘Molaga’ (chilli), used to refer to someone sharp or short-tempered. ‘Vennai’ (butter) too is used to call someone spineless as it melts.
75,000 markers decoded: Genetic roots of ancient Tamils unveiled
August 04, 2026
Human DNA analysis of samples collected from Keeladi and Adichanallur in Tamil Nadu shows that the inhabitants share close genetic proximity to South Indian, Sri Lankan Tamil, and South Asian ancestries.
12th National Handloom Day 2026: Special Handloom Exhibition Begins at Kalaivanar Arangam in Chennai
August 07, 2026
The 12th National Handloom Day 2026 celebrations are being held at Kalaivanar Arangam in Chennai, with a special handloom exhibition showcasing traditional textiles from Tamil Nadu and other states. The exhibition features popular Kanchipuram, Arani and Thirubuvanam silk sarees, Coimbatore Kota cotton sarees, Negamam cotton sarees, Salem white silk dhotis and various home textile products.
Eight Indian languages gain ground in Australian schools with new government grants August 21, 2026
In a bid to help more young Australians build fluency in Indian languages through to Years 11 and 12, the federal government has announced its next pedagogic investment in Indian language education through new dedicated funding. The eight languages are Bengali, Gujarati, Hindi, Malayalam, Punjabi, Tamil, Telugu and Urdu.
இந்த சிறுவர் பகுதியை உங்களுக்காக திரு. கௌரிசங்கர் வடிவமைத்திருக்கிறார்.
This children's section has been designed for you by Mr. Gowrishankar.
01
தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி – Tamil – Tamil – English Dictionary
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளுக்கு சமமான அர்த்தங்கள் தரும் வேறு தமிழ் வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி உதவும். (In order to learn synonyms and the meaning in English, this section helps you learn five Tamil words, their Tamil synonyms and the English words equivalent in meaning.)
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான எதிர்ப்பதங்களையும், அதற்கு ஈடான ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். (To learn the antonyms, five Tamil words, their meaning in English, Tamil words having opposite meaning for them and the equivalent English words for the opposite Tamil words have been provided here.)
சமமான ஆங்கில வார்த்தை | Equivalent opposite English word
1.
நல்லவன் (Nallavan)
Good Person
கெட்டவன் (Kettavan)
Bad Person
2.
புத்திசாலி (Puthisaali)
Intelligent
முட்டாள் (Muttaal )
Fool
3.
அறிவாளி (Arivaali )
Wiseman
மடையன் (Madaiyan)
Fool
4.
வீரன் (Veeran)
Hero
கோழை (Kozhai)
Cowardice
5.
நற்சொல் (Narchol)
Good word
இழிச்சொல் (Izhichol)
Bad word
03
பால் - இதன் பயன் என்ன?
பால் - இதற்கு ஈடு இணை என்பதே இல்லை. இதில் அடங்கியிருக்கும் சத்துக்களை இன்று வரை எவராலும் அறுதியிட்டு கூற முடியவில்லை.
01. மனிதர்கள் உபயோகத்திற்கு பசும்பால், எருமை பால் மற்றும் ஆட்டு பால் என்று கிடைக்கிறது. மற்றும் சில நாடுகளில் அங்கு அதிகமாக வளரும் மிருகங்களிடம் இருந்து பால் எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
02. உண்மை என்னவென்றால், நமக்கு கிடைக்கின்ற பால் தரமானதுதானா என்பதில்தான் நமக்கு அதிகம் சந்தேகம் வருகிறது. கிராமங்களில், நம் கண் முன்பாகவே மாடுகளை கொண்டு வந்து, நுரைக்க, நுரைக்க பால் கறந்து, அளந்து கொடுப்பார்கள். வாங்குபவர்களும், அளவு பாத்திரங்களில் தண்ணீர் இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுவார்கள். பால் விற்பவருக்கு அந்த கிராமத்தில் வாழும் மனிதர்களை பகைத்துக்கொள்ள முடியாது. ஒரு நாள் தண்ணீர் கலந்தாலும்,ஊரை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள். அவருக்கு காலம் காலமாக பால் வியாபாரம் என்பது மட்டுமே தெரியும் என்பது அடுத்த கட்டம்.
03. நகரங்களில், இப்போது பாக்கெட்டுகளில் பால் கிடைக்கிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தரும் பால் நமக்கு விற்பனை செய்யப்படுகிறது.
04. பலவிதமான நிலையில் பால் தருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வகைகளில் பால் கிடைக்கிறது.
05. கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்று தருகிறார்கள். இது தவிர டோன்ட் மில்க்; ஸ்கிம்ட் மில்க் என்று வியாபாரம் செய்கிறார்கள்.
06. கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாப்பிடுவதன் மூலம் எடை கூடாது என்ற வாக்குறுதியால், அந்த வகை பால் அதிகம் வியாபாரம் ஆகின்றது.
07. சமீபத்தில் அமெரிக்காவில் தெரிந்து கொண்ட ஆராய்ச்சி முடிவில் - கொழுப்பு நீக்கப்படாத புல் கிரீம் பால் குடிப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.
08. இதற்கு இது தான் காரணம் - புல் கிரீம் பால் சாப்பிடும்போது, வயிறு நிறைந்து விடுகிறது. மேற்கொண்டு சாப்பிடவேண்டும் என்ற நினைவோ அல்லது பசியோ வருவது இல்லை. பசிக்கிறது என்று அடிக்கடி நொறுக்குத்தீனி எடுத்துக் கொள்ளுவதற்கு சந்தர்ப்பமே வருவதே இல்லை. எனவே உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பே இல்லை.
09. பொதுவாக எடை கூடுதல் உள்ளவர்களில் 99 சதவீதம் நபர்கள் நொறுக்குத்தீனி தின்பவர்களாக இருப்பார்கள். கையில் கிடைக்கின்ற உணவு பொருட்களை சிந்தனையே இல்லாமல் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். பசித்து புசிப்பவர்கள் என்றும் ஆரோக்யமாகத்தான் இருப்பார்கள். உணவுப்பொருட்களை பார்த்து அவர்கள் மயங்குவது இல்லை.
10. பால் அதிக சத்து கொண்டது. பால் மற்றும் பால் மூலம் உற்பத்தி செய்கின்ற உணவு பொருட்களில், கால்சியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
11. தவறான நம்பிக்கைகளுக்கு இடம் தராமல் வேண்டும் போது பால் எடுத்துக்கொள்ளலாம். பால் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளுகிறது என்று மட்டுமே சொல்லமுடியும். மற்ற வகையில் அது மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு என்பதில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.
04
நீராவி எஞ்சின்
இன்று சென்னை போன்ற பெருநகரங்களில், இரயில்கள் பல ரூபத்தில் நகர்கின்றன. சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரும் செல்லும் EMU என்ற வகை மின்சார ரயில்கள். வேளச்சேரியிலிருந்து கடற்கரை வரும் செல்லும் MRTS என்ற பறக்கும் ரயில்கள். சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமான மெட்ரோ ரயில். மெட்ரோ ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. வேகம் அதிகம்.
வெளி நகரங்களுக்கு செல்கின்ற ரயில்கள் டீசல் எஞ்சின்களால் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்னால், நீராவி எஞ்சின்கள் இருந்தன. தற்போதும் சில இடங்களில் இவை இருக்கின்றன.
நீராவி மூலம் இயங்கும் என்ஜின்களுக்கு தேவைப்படுவது நிலக்கரி. நிலக்கரியை பயன்படுத்தி, தண்ணீரை சூடுபடுத்தி, அதன் மூலம் கிடைக்கும் நீராவியை பயன்படுத்தி சக்கரங்களை ஓடவைப்பது. புஸ் புஸ் என்று நீராவி சக்கரங்களுக்கிடையில் வந்து செல்வது மனதில் ஒரு திகிலை கொண்டு வரும். வண்டி கிளம்பும்போது, ஒரு வித ராகத்தோடு கிளம்ப ஆரம்பிக்கும்.
ரயில் செல்லுகின்ற பாதையின் அருகில் நின்று பார்க்கும்போது “சிக்கு புக்கு சிக்கு புக்கு” என்ற ஒலியோடு செல்வதை பார்ப்பதற்கு திகிலாகவும் வியப்பாகவும் இருக்கும்.
இது ஒரு புறம் இருக்க, நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்ற ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு அந்த அனுபவம் எப்படி இருக்கும்?
அப்போது மூன்று வகை பெட்டிகள் உண்டு - மூன்றாம் வகுப்பு; இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு. வசதியுள்ளவர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்வார்கள். குளிர் சாதன பெட்டிகள் அறிமுகம் ஆகவில்லை. அதன் பிறகு மூன்றாம் வகுப்பை நீக்கினார்கள். சிறிது சிறிதாக இரண்டாம் வகுப்பு - ஸ்லீப்பர் வகை; முதல் வகுப்பு - குளிர்சாதனம்; இரண்டாம் வகுப்பு குளிர்சாதனம்; மூன்றாம் வகுப்பு குளிர் சாதனம் என்ற வகை பெட்டிகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
நீராவி எஞ்சின் மூலம் பயணம் செய்யும்போது, வெளிவரும் புகையிலிருந்து புகைத்தூள்கள் பெட்டிகளில் படிய ஆரம்பிக்கும். எனவே இருக்கையில் அமர்ந்தவுடன், அழுக்கு உடைகளுக்கு மாறிவிடுவார்கள் பயணிகள். இருந்தாலும், நேரம் ஆக நேரம் ஆக புகை உள்ளிருக்கும் அணைத்து பொருட்களிலும் படிய ஆரம்பிக்கும். ஒரு நாள் பயணம் என்றால், பயண முடிவில் முகம் கழுவாமல் இறங்கினால், நம்முடைய உறவினர்களுக்கு நம்மை அடையாளம் தெரியாமல் போய்விடும்.
இருந்தாலும் ரயில் பயணம் என்பதே சுகம் தான். நினைத்த நேரத்தில் ஒரு பெட்டியிலிருந்து அடுத்த பெட்டிக்கு நடந்து செல்லலாம். இங்கும் அங்கும் நடை பயிலலாம். சாப்பிடலாம்; சீட்டு விளையாடலாம்; இந்த வசதிகள் பேருந்துகளிலும், விமானங்களிலும் கிடைக்காது.
புதியபுதிய கண்டுபிடிப்புகள் மென்மேலும் அதிகவசதிகளை கொண்டு வருகின்றன.
சொல்வகை - Match the words
இங்கு பதினாறு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகைப்படுத்துங்கள். ஒரு வகைக்கு நான்கு சொற்கள். எனவே நான்கு வகைகள் கிடைக்கும். (இந்த பயிற்சி உங்களுடைய சொற்களை வகைப்படுத்தும் திறமையை வளர்க்கும்). Sixteen Tamil words are provided here. Arrange them according to the following four categories (Four words per category).
தோட்ட வேலை உபகரணங்கள் (Instruments used in garden)
கடை வீதி (Related to street)
மாணவர்களுக்கு தேவையானது (Requirements for students)
கடலோடு தொடர்புள்ளவை (Related to sea)
பதினாறு சொற்கள்
அரிவாள் (Sickle)
பலசரக்கு வியாபாரம் (Provisional Stores)
பென்சில்கள் (Pencils)
படகுகள் (Boats)
உணவகங்கள் (Hotels)
பேனா (Pen)
கடப்பாரை (Crow Bar)
புத்தகப்பை (Book bag)
கப்பல்கள் (Ships)
முத்துக்கள் (Pearls)
பூ வியாபாரம் (Flower sales)
மண்வெட்டி (Shovel)
நோட்டுப்புத்தகம் (Note Books)
கோடாலி (Axe)
மீன்கள் (Fish)
காய்கறி கடைகள் (Vegetable Shops)
தமிழ் விடுகதைகள் – Tamil Riddles
01. குளத்தில் ஒரு தட்டு நனையாமல் மிதந்து கொண்டு இருக்கிறது. - அது என்ன ?
A glistening plate is found to be floating on water in a lake. What is it?
02. ஓடிக்கொண்டே இருப்பான். ஆனால் இருந்த இடத்தை விட்டு நகரவே மாட்டான்.
He moves and makes others move; however, he never leaves his place. Who is he?
03. ஓடியாடி கத்திக்கொண்டே இருப்பவள் உடலைத் தேடி வந்து குத்துவாள் - அவள் யார் ?
She shouts moving here and there and finally bites the body. Who is she?
04. ஓடுவான், சாடுவான், ஒற்றைக்காலில் நின்று கொண்டு இருப்பான். அவன் யார் ?
He moves here and there; however, stands on his single leg. Who is he?
05. ஒரு முழ நீளம் உள்ள மூங்கிலில் ஒய்யார சங்கீதம். அது என்ன ?
The one foot long bamboo stick renders a sweet music.What is it ?
மூளைக்கு வேலை
கீழ்க்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டு இங்கு கொடுக்கப்பட்ட வெளிர் (வெள்ளை) கட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து வார்த்தைகளும் "உ" என்ற எழுத்தில் தான் தொடங்குகின்றன. வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளின் அருகில் தரப்பட்டுள்ளன. The meanings for the words are provided in English alongside Tamil words.
உ
1
2
3
4
5
6
கட்டங்களில் மறைந்துள்ள வார்த்தைகள்
கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகளின் உதவியால் இங்கே உள்ள கட்டங்களை மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளால் நிரப்புங்கள். கட்டங்களை நிரப்பிய பின்னர், நிழலிட்ட கட்டங்களில் அடங்கியுள்ள எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்தால், அழகான தமிழ் வாக்கியம் கிடைக்கும். அந்த வாக்கியம் என்ன?
தமிழில் அர்த்தம்
English meaning
01
வேளாண்மை
Agriculture
02
உறுதி
Determination
03
கவர்ச்சி
Attraction
04
பெரிய ஊர்வலம்
Long Procession
05
தீப ஒளி
Light of the lamp
06
தப்பு
Mistake
07
கடுங்காற்று
Storm
வாசகர் பக்கம்
ஒரு கைப்பிடி அன்பு
மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் அருண். பேருந்து நிறுத்தத்தில் வயதான ஒருவர், கையில் பழைய துணிப்பையுடன் சோர்வாக அமர்ந்திருந்தார்.
அருகில் நின்ற அருண், “தாத்தா, எங்கே போகணும்?” என்று கேட்டான்.
“ஆஸ்பத்திரிக்குப் போகணும் தம்பி. பணம் போதலை. நடந்து போகலாம்னு நெனச்சேன். ஆனா நடக்க முடியல. அதான் உட்கார்ந்திருக்கேன்” என்றார் அவர்.
அருண் உடனே அருகிலிருந்த ஆட்டோவை அழைத்தான். அந்த வயதானவரை ஆட்டோவில் அமரச் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஆட்டோ கட்டணத்தைத் தானே கொடுத்தான்.
மருத்துவமனையில் அந்த முதியவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, தேவையான பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்தான்.
“தம்பி, இன்று நீ எனக்குச் செய்த உதவி என் உயிரைக் காப்பாற்றியது. நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்றார்.
“இதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். உங்களால் முடியும்போது வேறு ஒருவருக்கு உதவி செய்யுங்கள்,” என்றான்.
சிகிச்சை முடிந்ததும் முதியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அருண் புன்னகைத்தபடி, “தாத்தா, மனிதன் மனிதனுக்கு செய்யும் உதவிக்கு கணக்கு எதற்கு? இன்று நான் உங்களுக்கு உதவினேன். நாளை நீங்கள் இன்னொருவருக்கு உதவுங்கள். அந்த நன்மை தொடர்ந்து பயணித்தால் போதும்,” என்றான்.
சில நாட்களுக்குப் பிறகு, அருண் அதே பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிறுவன் வயதான பெண்ணின் கனமான பையைத் தான் சுமந்துகொண்டு அவர் கையைப் பிடித்து பேருந்தில் ஏற உதவி செய்வதைப் பார்த்தான்.
அந்தச் சிறுவனை அழைத்து, “யார் இப்படி உதவி செய்யச் சொல்லிக் கொடுத்தது?” என்று கேட்டான்.
லீலா ராமசாமி, காஞ்சிபுரம்
“யாரும் சொல்லவில்லை அண்ணா. என் தாத்தாவுக்கு யாரோ முன்பின் தெரியாத ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் உதவி செய்ததை விட இது ஒண்ணும் பெரிய உதவி இல்லையே!” என்றான்.
அருணின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஒரு சிறிய உதவி, இன்னொரு நல்ல உள்ளத்தை உருவாக்கியிருந்தது.
மனித நேயம் என்பது ஒருவரிடம் தொடங்கி, பலரிடம் தொடர்ந்து பயணிக்கும் ஒரு அழகான தொடர்வினை.
கை வண்ணம்
செயின்ட் ஜோசப் மிடில் ஸ்கூல் பரபரப்பாக இருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாட்டு போட்டி ,பேச்சுப்போட்டி, பேன்சி டிரஸ் போட்டி என பலவித சிறப்பு போட்டிகள் நடைபெற்றன. வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் நிறைந்த தோட்டம் போல் பார்ப்பதற்கு கண்ணை கவர்ந்தது குழந்தைகளின் அணிவகுப்பு. ஓவிய போட்டிக்கு மரியம் சிஸ்டரும் கிறிஸ்டினா சிஸ்டரும் தலைமை தாங்கினார்கள். நாற்பது குழந்தைகளுக்கு மேலாக அதிக அளவில் ஆர்வத்துடன் கையில் கலர் பென்சில்,ஸ்கெட்ச் என தேவையானவற்றை கொண்டு வந்து இருந்தார்கள்..
“உங்களுக்கு பிடித்ததை எது வேண்டுமானாலும் வரையலாம்”, என்று சொன்னவுடனே மடமடவென வரைய தொடங்கியது பிஞ்சு கைகள். அதில் வித்தியாசமாக ஒரு கை தெரிய அருகில் சென்ற மரியம் சிஸ்டர் கேட்டார்,” ஹெல்ப் பண்ணட்டுமா?,
நோ என்று தலையை மட்டும் ஆட்டியது.
வாட் இஸ் யுவர் நேம் ?
“ஏஞ்சலின்”
“டைம்ஸ் அப்”, என சொல்லிக் கொண்டே ட்ராயிங் பேப்பரை திரும்ப பெற்றனர் இரு சிஸ்டர்களும்.
“மாலை 4 மணிக்கு பரிசளிக்கும் விழா நமது அசெம்பிளி ஹாலில் நடக்கும். எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும் சரியா சில்ட்ரன்ஸ்”, சத்தமாக சொன்னாள் கிறிஸ்டினா.
பரிசுக்கான ஓவியத்தை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருந்தாலும் மரியம் சிஸ்டர் அந்த ஓவியத்தை தேர்ந்தெடுத்தார். அதில் மீனவ பெண்கள் இருவர் கூடை நிறைய கருவாடும் நெத்திலி மீன்களையும் வைத்து விற்பது மனதை ஈர்த்தது அதில் ஐ லவ் மை மதர் அண்ட் கிராண்ட் மா என எழுதி இருந்தது.
ஏற்கனவே சொன்ன நேரத்திற்கு பரிசளிக்கும் விழா ஆரம்பித்தது. தலைமை தாங்கியவர் “ஏஞ்சலின்” என்று பெயரை அறிவித்ததும் பெயருக்கு ஏற்றாற்போல் அழகான அவள் ஓடி வந்து தன் சூம்பி போன கையை நீட்டி பரிசை பெற்றதும் அனைவரின் மனமும் கசிந்தது.
கே. சரண்யா, ஸ்ரீரங்கம்
நிழலுடன் பயணம்
வெயில் உச்சியில் என்னோடு ஒட்டுகிறது !
அழுதால் நனைகிறது, சிரித்தால் நீள்கிறது !
ரகசியங்களைக் கேட்கும் தோழன் இது
கேள்வியும் கேட்பதில்லை, தீர்ப்பும் சொல்வதில்லை.
பகலில் துணை, இரவில் கரைந்தாலும்
தெரு விளக்கில் மீண்டும் தேடி வரும்
தோல்வியில் கூட க் குனிந்து நடக்கும்.
வெற்றியில் என்னை விட உயர்ந்து நிற்கும் .
நட்புகள் வந்து போனாலும்
விடாமல் வருவது நிழல் மட்டுமே .
நான் இல்லாமல் போனாலும்
யார் காலடியிலோ ஒட்டிக்கொள்ளும்.
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி,சென்னை
ஒரே ரத்தம்
பீகார் முஜாஃபர்பூருக்கு ஒரு இன்ஸ்பெக்ஷன் விஷயமாக கல்கத்தாவிலிருந்து சென்றிருந்தான் செல்வன். ரயிலை விட்டிறங்கி பக்கத்துல ஒரு லாட்ஜில் அறை எடுத்துக் குளியல் போட்டாச்சு. நாலு பூரியும் மட்டர் பன்னீரும் டீயும் பசியைத் தீர்த்தன. ஆட்டோ பிடித்து நாலு கிமீ தூரத்திலுள்ள பிஸ்கட் ஃபேக்டரிக்குப் போய் இன்ஸ்பெக்க்ஷனை முடித்தான். போட்டிக் கம்பெனிகளால் வியாபாரம் சிறிது டல்லாம்.
லாட்ஜூக்குப் போற வழியில் ஒரு நல்ல ஓட்டலில் பிரியாணியைச் சுவைத்தான். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு டேஸ்ட் என நினைத்துக்கொண்டே காலாற சில தெருக்களில் சுற்றிப் பார்த்தான். திடீரென கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. கடைகளை எல்லாம் மூடத்தொடங்கினர். லோக்கல் பிரபல அரசியல்வாதியைக் கைது பண்ணிவிட்டார்களாம். ரோட்டில் நடக்க முடியவில்லை. இன்னும் அரை கிமீ தூரத்தில்தான் லாட்ஜ். நடக்கமுடியாதபடி கல்லெறிகள். தெரியாத ஊர்ல ரிஸ்க்கும் எடுக்க முடியாது.பக்கத்து சந்தில் ஒரு வீட்டை நோக்கி நடந்தான். காலிங் பெல் அடித்துத் தனக்குத் தெரிந்த இந்தியில் பேசினான். பெயர், ஊர் எல்லாம் கேட்டார்கள். சரி... கொஞ்ச நேரம் உட்காரக்கூட விடமாட்டார்கள் போல என மனசுக்குள் வெம்பினான். உள்ளிருந்து ஒரு நீள் தாடி முதியவர் வந்தார்.
"வேலூரா" என மெதுவாக விசாரித்தார். "ஆமாம் ஸார்" என்றவுடன் ராஜ மரியாதை. பத்து வருடங்களுக்கு முன் வேலூர்ல அவருக்கு இருதயச் சிகிச்சையாம். லோக்கல் இளைஞர்கள் மூன்று பேர் டாக்டர்கள் கேட்ட மூன்று பாட்டில் இரத்தம் கொடுத்தார்களாம்." உங்க ஊரை மறக்க முடியாது தம்பி. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இரத்தம் கொடுத்து உதவும் ஊரு. நீ டீ குடிச்சிட்டு ராத்திரி நாஸ்தா முடிச்சிட்டு நிலைமை சரியான பிறகு லாட்ஜ் போ" என அபயம் அளித்தார். அட நம்ம ஊருக்கு இவ்வளவு மதிப்பா, இனிமேல் நாமும் ரத்ததானம் செய்யணும் என நினைத்துக்கொண்டு பெரியவரை வணங்கி நன்றி கூறினான்.
தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன், சென்னை
ஐம்பொறி ஆட்சி கொள்!!
கண்ணே நீ காட்சி பிழையுடன் கனவில் வாழ்ந்தால்
காணும் பொருள் எல்லாம் கானல்நீராய் தோன்றும்!!
பொய்மை தவிர்த்து மெய்மைதனை கைகொள்ளல்
மெய்யதனை பேணிக் காத்தலின் பெரிதாகும்!!
செவிவழி கேட்கும் செய்தி செம்மொழியாஎன
தெளிதல் செம்மையான வாழ்க்கைக்கழகு!!
தெளிந்தறியா மனம் தானே அச்சாணி இல்லா
வண்டியாக குடைசாய்ந்துக் கவிழ்ந்துவிடும்!!
பேச்சில் அடக்கம் பேருலகில் பெருமை சேர்க்கும்
உண்ணும் உணவில் அடக்கம் உடலைப் பேணும்
என்றவகை தானுணர்ந்து வள்ளுவர் வழிநடந்து
யாகாவாராயினும் நாகாத்தால் நாடே நமைகாக்கும்!!
நுகர்தல் என்பது நாசிக்கு அழகானாலும் மூச்சுகாற்று
நின்று போனால் மூலாதாரமே இல்லை அன்றோ!!
ஆகவே அகிலத்தோரே!! ஐம்பொறி ஆட்சி கொள்வோம்
அன்பினால் தனித்திறமையோடு தரணி ஆள்வோம்!!
கௌரி கோபாலகிருஷ்ணன், சென்னை
ஐரோப்பா பயணம் போகலாமா? (பகுதி 6)
மதிய உணவுக்குப் பின் city tour க்கு பஸ்ஸில் கிளம்பினோம். தெளிவாக எடுத்துச் சொல்லும் encyclopedia எங்கள் பயண மேலாளர் நவீன் இருந்தாலும் பிரான்ஸ் நாட்டு வழிகாட்டி தான் ஊரைச் சுத்திக் காட்டணுமாம். அதனால் இர்னி என்னும் ஃபிரெஞ்சுப் பெண் பஸ்ஸில் ஏறினார்.
இந்தியா கேட் போல் தோற்றமளிக்கும் Arc de Triomphe பேரரசர் நெப்போலியனால் 1806ல் கட்ட ஆரம்பித்து 1836ல் கட்டி முடிக்கப்பட்டது. போரில் வீர மரணமடைந்த பிரெஞ்சு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் உச்சிக்குச் செல்ல வேண்டுமெனில் முன்னரே பதிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு ஏறத்தாழ பத்து யூரோ நுழைவுக்கட்டணம்.
அதன் மேல் தளத்திலிருந்து பார்த்தால் சீராக வடிவமைக்கப்பட்டுள்ள 12 பெருஞ்சாலைகளும் 360 டிகிரியில் தெரியும். இதில் ஒரு சிறு அருங்காட்சியகம் இருக்கின்றது. மாலை தோறும் இதன் மேல் தளத்தில் ஏற்றப்படும் தீபம் அணையாத சுடருடன் விளங்குகிறது. நாங்கள் அந்த வளைவுக்கு முன்னே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பாரீஸ் வீதிகளைப் பார்க்கும்போது பாண்டிச்சேரி நினைவுக்கு வந்தது.
சூட்கேஸ் வடிவக் கட்டிடம், அகழியோடு காட்சி தந்த பண்டைய கோட்டை, Notre Dame Cathedral of Paris, Louvre Museum என்று பேருந்திலிருந்த படியே பார்த்தோம். ஒவ்வொன்றுக்கும் இறங்கி ஏற நேரமில்லை. எங்கும் குப்பையைப் பார்க்க முடியவில்லை. மக்கள் பொதுவாக நடந்தோ, சைக்கிளிலோ செல்வதால் வாகன நெரிசல் இல்லை, சத்தமில்லை, புகையில்லை.
இங்கே எல்லாரும் பிரெஞ்சு மட்டுமே பேசறாங்க. நம்ம ஊர்ல ஆட்டோக்காரர் முதல் காய்கறிக்காரர் வரை ஆங்கிலம் புரிந்து கொள்வார். இங்க ‘எங்க ஊருக்கு வந்தால் எங்க மொழி பேசுங்க!’ன்னு ஆங்கிலம் பேசுவதில்லை. நகரை வலம் வந்து முடித்த பின் வணிக வளாகத்தில் எங்களை இறக்கி விட்டபின் உள்நாட்டு வழிகாட்டி விடைபெற்றார். வாசனை திரவியம் வாங்க ஆர்வத்தோடு உள்ளே நுழைந்தோம். (நான் சும்மா பார்க்க மட்டுமே)
அங்கேயிருந்த ஒரு ஒடிசலான பெண் எங்களை பாதாளத்துக்கு அழைத்துச் சென்றாள். அது வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையாம். பாவம், கஷ்டப்பட்டு அரை மணி நேரமாக தண்ணி குடிக்காமல் விளக்கினாள். இருட்டான பாதாள அறையை ஒட்டி ஒரு திறந்த முற்றம். நம் காரைக்குடி செட்டிநாடு முற்றம்போல் இருந்தது.
மேலே சுட்டிக்காட்டி விளக்கினாள். அதில் ஜீபூம்பா ஜாடி போல் பெருசு பெருசாய் அடுக்கி வைத்திருந்தார்கள். நான் அவள் சொல்வதைக் கவனிக்கவில்லை. கீழே விதவிதமான குமிழ்களில் வாசனை திரவியங்கள் ஊற்றி விலை ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். தலை சுற்றிப் போனது. சும்மாவே எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வம் கிடையாது. விலையைப் பார்த்தபின் அதைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. வாசனையில் ஆசையுள்ள சிலர் வாங்கிக் கொண்டார்கள்.
இந்திய உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ‘Illumination of Eiffel Tower’ பார்க்கக் கிளம்பினோம். இதற்கு தனிப் பேருந்து. எங்கள் ஓட்டுநர் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது. அத்தோடு எங்கள் பேருந்தை அந்த இடத்தில் நிறுத்த அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.
காலநிலையைப் பொறுத்து இருட்டும்போது ஈபிள் கோபுரத்தின் எல்லாத் தளங்களிலும் பளீரென்று விளக்குகள் எரிகின்றன. தங்கத்தால் வடித்தது போல் ஈபிள் டவர் தகதகக்கிறது. 20,000 பல்புகளின் ஒளியில் ஜொலிக்கின்றது. அந்த இடத்திலிருந்து பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய்க் குவிகிறார்கள்.
அங்கே ஒரு இளைஞன் பஞ்சாபி பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தான். எங்கள் குழு ஜெய்ஸ்ரீ (வந்ததிலேயே அவள் தான் சின்னப்பெண்) செமயா ஆடினாள். அதைப்பார்த்து எல்லாருக்கும் உற்சாகம். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.
ஆப்பிரிக்கத் தம்பிகள் நம் பாண்டி பஜார் மாதிரி ஒரு ஷீட் விரித்து கூவிக் கூவி மினியேச்சர் ஈபிள் டவர்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஃபிரிட்ஜில் ஒட்டும் மேக்னெட் பேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே பரபரவென்று கடையைச் சுருட்டினான். காசு குடுக்க அவசரப்படுத்தினான். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே ‘One more euro’ என்று நச்சரித்தான். கொடுத்து முடிப்பதற்குள் ஆளைக் காணோம். போலீஸ் தலை தெரிந்ததும் ஓடி விட்டான். அந்த ஊர் போலீஸீக்கு மாமுல்னா என்னான்னு தெரியாது போல, மிகச்சரியாக ஒன்பது மணி ஆனதும் ஒரே உற்சாகக் கூச்சல்.
இப்போது தங்கப்பெண்ணின் உடல் முழுக்க அக்னி நட்சத்திரங்கள். ஐந்து நிமிடங்கள் ஒரு மாய உலகத்தில் இருப்பது போன்ற தோற்றம். பளிச் பளிச்சென்று நட்சத்திரங்களாய் அந்த உலோக கோபுரம் மின்னிய நிமிடங்கள் மறக்க முடியாதது. தொலைதொடர்புக்காக அன்று கட்டியது, ஒரு நாட்டின் பெருமையாய், பெருமிதமாய், கம்பீரமாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.
‘பொன்மகள் வந்தாள்’ பாட்டு நினைவுக்கு வர, தங்க விண்மீன்கள் விடைபெற்றதும் அங்கிருந்து கிளம்பினோம்.அன்று இரவு மீண்டும் நல்ல தூக்கம்.
வசந்தா கோவிந்தராஜன், சென்னை
விண்மீன் நண்பன்
இருள் சுவற்றில் மின்னும்
வெளிச்சப்புள்ளிகளின்
வியப்பூட்டும் தன்மை குறைவதேயில்லை.
எங்கு சென்றாலும் இணைபிரியாமல்
கண்சிமிட்டும் விண்மீன்கள்.
கவிதைகளின் ஆரம்பப்புள்ளியாக
விண்மீன்களையே பொறுக்கிக்கொள்வோம்.
காதலர்களின் உருவகமாய்
நட்சத்திரங்களே நாட்டியமாடும்.
பிரிவின் வலியில் கூடவே நின்று
கண்ணீர் ஒளியை உதிர்க்கும்.
பல்லாயிரம்கோடி வயதானதாம்
நட்சத்திரங்கள்.
காதலனுக்கோ
தன்வாழ்நாள் முடியும்போது
கூடவே இறந்துபோகும் துணைஜீவன்.
அப்பு சிவா, சென்னை
ஓவியக்கலை
Drawings by students studying in St. Antony's Higher Secondary School, Velachery, Chennai 600042
வாசகர் கருத்துக்கள்0